பெரம்பலூரில் ஜெ. பிறந்த நாள் வரவேற்பு வளைவு இரவில் இடிப்பு
பெரம்பலூர்: அதிமுகவினரால் பெரம்பலூரில் கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா பிறந்த நாள் வரவேற்பு வளைவை போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக இடித்துத் தள்ளி விட்டனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஜெயலலிதாவின் 56வது பிறந்த நாளையொட்டி துறைமங்கலம் என்ற கிராமத்தில், மூன்று ரோடு மற்றும் நான்கு ரோடு ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் வளைவுகளை பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் கட்ட ஏற்பாடு செய்தார். இதற்கு பெரம்பலூர் நகராட்சி ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் இந்த வளைவுகளைக் கட்டினார்.
இதனை எதிர்த்து பெரம்பலூர் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் அப்துல்பாரூக் என்கிற பாரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வளைவு அமைக்க தற்காலிக தடை விதித்தது. இதனால் கட்டுமானப் பணி நின்றது.
பின்னர் இந்த வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதித் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,
போக்குவரத்து இடையூறாக உள்ள நடுவில் உள்ள தூணை எடுத்து விட்டு கட்டிக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து பாரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூலை 31ம் தேதி பிறப்பித்த உத்தரவில், இரு வளைவுகளையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பின் நகல் கடந்த வாரம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் ஆகியோருக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து 6ம் தேதி இரு வளைவுகளையும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 7ம் தேதி உள்ளாட்சி இடைத் தேர்தல் நடந்ததால் தள்ளி வைக்கப்பட்டு நேற்று இரவு இடித்துத் தள்ளப்பட்டது.
பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன வளைவு இடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications