டெல்டா பாசனம்: காவிரியில் கூடுதல் நீர் திறப்பு
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக இந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முதலில் 5,000 கனஅடி என்ற அளவில் தொடங்கி, விவசாயப் பெருமக்களின் தேவைக்கேற்றவாறு படிப்படியாக அதிகரித்து, தற்போது 22,000 கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை குறைவாகப் பெய்த காரணத்தால், மேட்டூரின் முழுக் கொள்ளளவான 120 அடியை இன்றுவரை எட்டவில்லை. அதிகபட்சமாக 101 அடியை மட்டுமே எட்டி, தற்போது 91 அடி அளவே உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்னும் தொடங்கவில்லை என்பதாலும், காவிரி டெல்டா விவசாயப் பெருமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டும், மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை இன்றிலிருந்து 23,000 கனஅடியாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு அதிகத்தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் போதிய மழையின்மை காரணமாக, கடைமடைப் பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்ற விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முறையீட்டை ஏற்று, காவிரி மற்றும் வெண்ணாற்றில் தற்போது வழங்கப்படும் தண்ணீரின் அளவை முறையே 5,000 மற்றும் 10,000 கனஅடியாக உயர்த்தி வழங்க முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.