காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நீர்-முதல்வர்
சென்னை: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை 23 ஆயிரம் கன அடியாக உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக கடந்த 28.07.09 முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அவர்களுக்கு துவக்கத்தில் 5 ஆயிரம் கன அடி நீர் என ஆரம்பித்து தற்போது 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் இருக்கும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொய்த்த காரணத்தால், மேட்டூரின் கொள்ளளவான 120 அடி எட்டப்படவில்லை. அதிகபட்சமாக 101 அடியை மட்டுமே எட்டியுள்ளது. அதுவும் தற்போது 91 அடியாக குறைந்துவிட்டது.
வடகிழக்குப் பருவமழை இன்னும் தமிழகத்தில் ஆரம்பிக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை இன்று முதல் 23 ஆயிரம் கன அடியாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் போதிய மழையின்மை காரணமாக, கடைமடைப் பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்ற விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முறையீட்டை ஏற்கப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் வெண்ணாற்றில் தற்போது வழங்கப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்கிறது.