3 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் பெரும் தேர்தல் என்பதால் காங்கிரஸ் மற்றும் பாஜக வட்டாரங்கள் பதைபதைப்புடன் உள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த மாநிலங்களில் படு சூடான பிரசாரம் நடந்து வந்தது. இந்த பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு பல பின்னடைவுகள் உள்ளதால் காங்கிரஸ் வட்டாரம் சற்று கிலியுடன் காணப்படுகிறது. உட்கட்சிப் பூசல், டிக்கெட் கொடுத்ததில் தகராறு, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மகனுக்கு சீட் கொடுத்ததால் ஏற்பட்ட பூகம்பம், விவசாயிகள் தற்கொலை, அரசுக்கு எதிரான அதிருப்தி அலை என மகாராஷ்டிர தேர்தல் களம் சூடாக காணப்படுகிறது.
மேலும், பிரசாரத்தின்போது தலைவர்கள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துத் தாக்கிக் கொண்டதையும் வாக்காளர்கள் பார்த்தனர்.
நேற்று முன்தினம் நக்சலைட்டுகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 17 போலீஸார் கொல்லப்பட்டதால் அரசு மீதான அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் மூன்று மாநிலங்களிலும் பிரசாரம் செய்தனர்.
பாஜக சார்பில் அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
இந்த மூன்று மாநிலங்களிலும் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. 12ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.












Click it and Unblock the Notifications