திமுக-காங் மட்டும் இடம் பெற்ற குழுவால் என்ன பயன் - ராஜா கேள்வி
டெல்லி: இலங்கைக்குப் போயுள்ளது திமுக, காங்கிரஸ் கூட்டுக் குழு. இப்படி ஒரு குழுவை அனுப்ப என்ன காரணம். இதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது என்று கேட்டுள்ளார் சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் அரசியல் கட்சிகள் எதையும் இந்தக் குழுவை அனுப்புவது தொடர்பாக மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஆலோசிக்கவில்லை. குழுவைத் தேர்வு செய்வதற்கு முன்பு இப்படி ஒரு ஆலோசனை நடந்திருக்க வேண்டும். எனவே இந்தக் குழு எந்த வகையான பிரதிநிதித்துவத்தையும் பெற முடியாது.
இப்படி ஒரு குழுவை அனுப்ப வேண்டியதன் அவசியம் என்ன. இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு இலங்கை அரசு. அப்படிப்பட்ட நிலையில் இப்படி ஒரு குழு போவதால் என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது.
போர் முடிந்ததுமே 180 நாட்களில் மறு குடியமர்த்தல் நடவடிக்கைளை மேற்கொண்டு விடுவோம் என இலங்கை அரசு உறுதியளித்தது. ஆனால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் கூட அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலையில் தொடர்ந்து பரிதவித்து வருகின்றனர் என்றார் ராஜா.