பெண் வன்கொடுமை சட்டத்தில் திமுக கவுன்சிலர் கைது
தக்கலை: நகராட்சி அதிகாரி முன்னிலையில் பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் திமுக கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் தக்கலை அடுத்த திருவிதாங்கோடு பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் வேலப்பன். இவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார். இவர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணியை சந்திக்க சென்றார். அப்போது அவரது அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் சபீனா, பதிவு எழுத்தர் சமீமா பீவி ஆகியோர் இருந்தனர்.
அப்போது பெண் அதிகாரிகள் இருவரையும் கவுன்சிலர் வேலப்பன் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி தக்கலை போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வேலப்பனை கைது செய்தனர். இவர் மீது 2002ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திமுக கவுன்சிலர் கைதான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications