'சினிமாக்காரர்கள் மீது காட்டுவது போல மீனவர்கள் மீதும் அக்கறை காட்டலாமே அரசு?'

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: திரையுலகினரைத் திருப்திப்படுத்த பத்திரிக்கை செய்தி ஆசிரியரைக் கைது செய்ய வேகமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் மீனவர்களைக் காக்க வேகம் காட்டாதது ஏன் என்று பல்வேறு மீனவர் சங்கங்கள் அதிருப்தியும், வேதனையும் வெளியிட்டுள்ளன.

திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தினமலர் செய்தி ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், பதிலுக்கு நடிகர்கள் சிலர் மீது பத்திரிக்கையாளர்கள் கொடுத்த புகார்களுக்கு இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும் பல்வேறு தரப்பினருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பல்வேறு மீனவர் சங்கங்கள், எங்களது பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்து வருகிற நிலையில், அதுகுறித்து இதுவரை அரசு எந்தவிதமான உறுதியான, வேகமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சாதாரண சினிமாக்காரர்களுக்கு அரசு வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுவது வேதனையாக இருப்பதாக குமுறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விசைபடகு மீனவர் நலச்சங்க பொதுசெயலாளர் போஸ் கூறுகையில், அரசுக்கு அன்னிய செலாவணியை அதிகம் தருவது மீனவர்கள். ஆனால், எங்கள் பிரச்னைகள் நீடிக்க வேண்டும். அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் கூறிய உடன் செய்தி ஆசிரியரை கைது செய்யும் அளவுக்கு இன்றைய அரசின் நிலை உள்ளது. எங்கள் மீதான தாக்குதல் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள், புகார்களுக்கு இன்று வரை நடவடிக்கை எடுத்ததில்லை என்று வேதனைப்பட்டார்.

அதேபோல, நாட்டுபடகு மீனவர் நலஉரிமை சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறுகையில்,

தமிழக மீனவர்களின் இன்றைய நிலை, மத்திய அரசை விட மாநில அரசுக்கு நன்றாக தெரியும். இருந்தும் இன்று வரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

எத்தனையோ உயிரையும், கோடிக்கணக்கான பணத்தையும் இழந்துள்ளோம். ஓட்டுக்கு மட்டும் எங்களை நாட்டின் பிரஜையாக கருதுகிறார்கள். சினிமாகாரர்கள் என்றால் கேட்ட உடன் நலவாரிய அறிவிப்பு வருகிறது. இங்கே செத்து மடியும் எங்களுக்கு சராசரி பாதுகாப்பை கூட தரவில்லை என்று குமுறினார்.

இந்திய, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தமிழக பிரதிநிதியான யு.அருளானந்தம் கூறுகையில்,

தலைமுறைகளை கடந்து மீனவர் பிரச்னை சாதகமற்ற நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.மீனவர்களுக்கு மத்திய அரசிடம் குரல்கொடுக்க கூடிய வலிமை இருந்தும் அதை செய்ய சரியான அரசியல்வாதி இல்லை.

சினிமாக்காரர்களுக்கு தரும் முக்கியத்துவம் மீனவர்களுக்கு இல்லை. தன்வசம் உள்ள கச்சத்தீவை காக்க இலங்கை அரசு அதன் கடமையை செய்து வருகிறது. எங்களை காக்க தமிழக அரசு என்ன செய்துள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+