மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு சுறு சுறு பண வினியோகம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கும் வேலையில் முக்கியக் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனவாம்.
வாக்காளர்களிடம் சாதனைகளைக் கூறி ஓட்டுக் கேட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போது கரன்சியைக் காட்டி கேட்பது (கெடுப்பது) தான் புதிய பாணி அரசியலாக மாறியுள்ளது. இந்த புதிய பாணி அரசியல் மகாராஷ்டிராவுக்கும் பரவி விட்டது.
அங்கு 288 சீட்கள் கொண்ட சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். மைக் செட்டுகளுத்தான் ஓய்வே தவிர அரசியல் கட்சியினர் இன்னொரு வேலையில் படு மும்முரமாக உள்ளனர். அது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பது.
வாக்காளர்களுக்கு பணம், மது, உணவு உள்ளிட்டவற்றை வழங்கும் வேலையில் பல வேட்பாளர்கள் மும்முரமாக உள்ளனராம். பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கல் இவர்கள்.
நேற்று கோலாப்பூர் பகுதியில், ஒரு டிரக் விபத்தில் சிக்கியது. அந்த டிரக்கில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்தன. இவற்றைக் கைப்பற்றிய போலீஸார், இவை அனைத்தும் வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டு செல்லப்பட்டவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கோலாப்பூரில் கடத்தல் சரக்கு பறிமுதல் செய்யப்படுவது இது 3 வது முறையாகும்.
இதுகுறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் கூறுகையில், சிலர் வாக்காளர்களை விலைக்கு வாங்க இப்படி மது பாட்டில்களை கடத்திச் செல்கின்றனர் என்றார்.
ஆனால், சிவசேனா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ராஜேந்திர பட்னி என்பவரை வாக்காளர்களுக்கு உணவு கொடுத்தபோது தேர்தல் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.
அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 பேர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததை, ஐபிஎன் லோக்மாத் தொலைக்காட்சி சேனலின் உதவியோடு தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். சரத் பவார் பேரணிக்கு வந்தவர்களுக்கு இந்தப் பணப் பட்டுவாடா நடந்தது.
மும்பையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் பரத் பரேக் பயணம் செய்த வாகனத்தை ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.