வெள்ளம்- ரோசய்யா வேன் மீது மக்கள் கல்வீச்சு
ஹைதராபாத்: ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற முதல்வர் ரோசய்யா மீது பொது மக்கள் கல்வீச்சில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை ஆந்திராவை புரட்டி போட்டுவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவிக்கின்றனர். இதையடுத்து மாநில முதல்வர் ரோசய்யா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று கர்னூல் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த அவர், அங்கிருந்து கோவில்கள் நிறைந்துள்ள ஆலம்பூர் பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் பேருந்தில் ஏறி அருகிலிருந்த கல்லூறு கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் பலர் அவரை ஏதேச்சையாக பார்த்துவிட்டனர். அவர்கள் முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.
ஆனால், அந்த கும்பலில் இருந்த சிலர் அவருக்கு எதிராக கோஷம் போட்டனர். தாமதமாக வருவதாக குற்றம்சாட்டினர்.
சுற்றுப்பயணத்தை தொடர்ந்த ரோசய்யா, துங்கபத்ரா நதியை கடந்து பஞ்சலிங்காலா என்ற கிராமத்துக்கு திறந்த வேனில் சென்றார். அங்கும் அவருக்கு எதிராக மக்கள் கோஷமிட்டனர். வெறும் கண்துடைப்புக்காக வரக்கூடாது. நீங்கள் அரசியல் செய்வதற்கு நாங்களா கிடைத்தோம். உடனடியாக இடத்தை காலி செய் என்றனர்.
முதல்வர் பார்வையிடுவதால் எங்களது வயிறு நிறைந்துவிடுமா? ஆபத்து நேரத்தில் உதவாமல் ஒரு வாரம் கழித்து வந்து என்ன பயன் என கோஷமிட்டனர்.
மக்கள் கடும் கொதிப்பில் இருப்பதை பார்த்த அதிகாரிகள் ரோசய்யா அங்கு இருக்க வேண்டாம் என கேட்டு கொண்டனர். இதையடுத்து ரோசய்யா வந்த வாகனம் அப்பகுதியில் நிற்காமல் கொஞ்சம் தூரம் தள்ளி சென்று நின்றது. அங்கு ஓடி வந்த மக்களிடம் மட்டும் அவர் புகார்களை பெற்று கொண்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கர்னூல் செல்வதற்கு பஞ்சலிங்காலா வழியே வந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் நிற்காமல் சென்ற காரணத்துக்காக அவரது வாகனத்தின் மீது கல்வீச்சில் இறங்கினர். இந்த சம்பவத்தில் முதல்வருடன் அந்த வேனில் வந்த போட்டோகிராபர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.












Click it and Unblock the Notifications