நெல்லை-ஸ்டாலின் பேனர் கிழிப்பு, எரிப்பு
நெல்லை: துணை முதல்வர் ஸ்டாலினை வரவேற்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை மர்ம கும்பல் ஒன்று கிழித்து தீ வைத்தது.
தென் மாநிலங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நெல்லை வருகிறார். அவர் நாளையும், 14ம் தேதியும் நெல்லை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு சிலை, மேம்பாலம் மற்றும் கட்டிட திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்.
அதில் முதல்வர் கருணநதியின் பெற்றோர்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கும் ராதாபுரம் புதிய பேருந்து நிலைய திறப்பும் விழாவும் ஒன்று. இந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என காங்கிரஸார் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் துணை முதல்வரான பின்னர் ஸ்டாலின் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவதால் அப்பகுதி முழுவதும் சாலையோரங்களில் திமுகவினர் மெகா சைஸ் டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர்.
இன்று அதிகாலை வள்ளியூர்-ராதாபுரம் சாலையில் தெற்கு வள்ளியூர் பூவிலக்கு, தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இடைகால் பகுதியில் வைக்கப்பட்டிருந்த திமுகவினரின் டிஜிட்டல் பேனர்களை கிழித்தும், தீ வைத்து எரித்தும் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த தகவல் அறிந்த திமுகவினர் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications