டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள்-100 பேர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட 70 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, செங்கம் பகுதிக்கு அருகில் உள்ளது தானாமேடு. இங்கு பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும் குடிமகன்கள் போதையில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளிடம் ரகளை செய்யும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பொது மக்கள் அப்பகுதியிலிருந்து டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தானாமேடுக்கு அருகில் இருக்கும் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் செங்கம், திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு செல்ல இங்கு வந்து பேருந்தில் செல்ல வேண்டும் என்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமிருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் 'குடி'மகன் ஒருவர் வம்பு இழுத்து வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த பொது மக்கள் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் இன்று காலை போராட்டம் நடத்தினர்.
சுமார் 70 மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
திருவண்ணாமலை வட்டாச்சியர் முருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். டாஸ்மாக் கடை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications