வாக்குபதிவு: அருணாச்சலில் 70%, ஹரியாணாவில் 50%, மகா.வில் மந்தம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியாணாவில் 50 சதவீதம், மகாராஷ்டிராவில் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

இந்த மூன்று மாநிலங்களிலும் இன்று சட்டசபைத் தேர்தல் நடந்தது.

கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தொழிலதிபர் அனில் அம்பானி, மும்பை போலீஸ் கமிஷனர் சிவானந்தன், கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் உள்ளிட்டோர் முதலிலேயே ஓட்டுப் போட்டனர்.

சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுரேவுடன், புனே மாவட்டம் பாரமதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் தனது குடும்பத்தினருடன் லத்தூர் மாவட்டம் பபல்காவோன் கிராமத்தில் வாக்களித்தார்.

மகாராஷ்டிரம்:

முன்னதாக 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கு காலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கியது.

பாதுகாப்புப் பணியில் 1. 29 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும், புற ராணுவப்ப டையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் பெருமளவில் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நக்சலைட்டுகள் பாதிப்பு உள்ள கட்சிரோலி, சந்திரப்பூர் மாவட்டங்களில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்தம் 3559 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுயேச்சைகள் மட்டும் 1820 பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலனாவர்கள் கட்சியில் சீட் கிடைக்காததால் போட்டியிடும் அதிருப்தி வேட்பாளர்கள் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 211. தேர்தலுக்காக 84 ஆயிரத்து 136 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு வாக்குப் பதிவு சற்று மந்தமாகவே இருக்கிறது. மதியம் 3 மணிக்கு 40 சதவீத பேர் தான் வாக்களித்துள்ளனர். இந்த மாநிலத்தில் காங்கிரசும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பாஜக-சிவசேனை ஒரு அணியாகவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் வேதிகே தனித்தும் போட்டியிடுகின்றன.

வாக்குசாவடியை சுற்றிவளைத்த நக்சல்கள்...

இந்நிலையில் கட்சிரோலி மாவட்டம் காம்தலா கிராமத்தில் உள்ள வாக்குசாவடிகளில் சிலவற்றை நக்சல்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதையடுத்து வாக்குச் சாவடிகளில் மாட்டி கொண்டுள்ள 30 தேர்தல் அதிகாரிகளை மீட்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

முன்னதாக இப் பகுதியில் தேர்தல் தொடங்கியதும் நக்ஸல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அருணாச்சல் பிரதேசம்....

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல் பிரதேசத்தில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. முதல்வர் டோர்ஜி கந்து உள்ளிட்ட 3 காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், மீதமுள்ள 57 இடங்களுக்கு மட்டும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

7.25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 151 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 60 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆனால் மத்தியில் அதன் கூட்டாளிகளாக உள் தேசியவாத காங்கிரஸ் இங்கு தனித்துப் போட்டியிடுகிறது. 36 தொகுதிகளில் அது போட்டியிடுகிறது.

திரினமூல் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக அருணாச்சல் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. 26 தொகுதிகளில் அது போட்டியிடுகிறது. பாஜக வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே களத்தில் நிற்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் மதியம் 3 மணி வரை சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஹரியாணாவில் 50% வாக்குபதிவு...

ஹரியாணா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு விறுவிறுவென நடந்து வருகிறது. சுமார் 1.3 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இன்று மதியம் 3 மணி வரை 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சுயேட்சை ஏஜென்ட் கொலை...

கைய்தால் மாவட்டம், கூல்கா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தில்லு ராம் மற்றம் சுயேட்சை வேட்பாளர் குல்வந்த பசிஹர் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாக்குசாவடி ஏஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டார்.

இறந்த அந்த நபரின் பெயர் ஜோதி ராம் (48). இவர் சுயேட்சை வேட்பாளரின் ஏஜென்ட்டாக இருந்தவர். இதையடுத்து அந்த சுயேச்சையின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் காங்கிரஸ்க்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+