கிருஷ்ணகிரி, செங்கல்பட்டில் கன மழை-பள்ளிகள் மூடல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று இடி மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோல செங்கல்பட்டிலும் நேற்று பலத்த மழை கொட்டியது.
தமிழகத்தில் என்ன மாதிரியான காலம் நிலவுகிறது என்பதே புரியாத வகையில் திடீர் திடீரென கன மழையும், பயங்கர வெயிலும் மாறி மாறி குழப்பிக் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 1 வாரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி அணை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன.
ஓசூர் அருகே நெடுஞ்சாலையில் ரோடு இரண்டாக துண்டித்ததால் 2 நாட்கள் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக மழை பெய்யவில்லை. கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்த நிலையில், காலை 7 மணி முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் நகர் முழுவதும் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
காலை நேரத்தில் பலத்த மழை கொட்டியதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டனர். இருப்பினும் மாணவ-மாணவிகள் குடையை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். ஆனால் பலத்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.
செங்கல்பட்டில்...
இதேபோல செங்கல்பட்டில் நேற்று மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழை கொட்டியது. இதனால் நகரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மழை நீர் ஆறு போல ஓடியதால் வாகனப் போக்குவரத்தும் சிரமத்திற்குள்ளானது.
உடுமலைப்பேட்டையில்...
இதேபோல உடுமலைப்பேட்டையில், நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் அப்பகுதியில் உள்ள 500 பாக்கு மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன.