மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: தமிழக நாடாளுமன்ற குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் தமிழக மீனவர்கள் தற்போதும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை நிறுத்த வேண்டும் என ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த பலனுமில்லை.
இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 6 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டும் வகையில் வானத்தை பார்த்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
மேலும் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான படகின் மீது தங்களது ரோந்து படகை மோதி அதை சேதப்படுத்தினர்.
பின்னர் மீனவர்கள் வைத்திருந்த பல கிலோ இறால்மீன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். துப்பாக்கியால் அவர்களை அடித்து காயப்படுத்தினர். மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தங்கச்சிமடம் பகுதி மீனவர்களுக்கும் இதேபோன்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக நாடாளுமன்ற குழுவினர் இலங்கை சென்றுள்ள நிலையில் இங்கு மீனவர்கள் தாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.