சிக்கலில் சென்னை எண்ணூர் இணைப்பு சாலை திட்டம்!
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் இணைப்புச் சாலைத் திட்டம் பெரும் சிக்கலில் மூழ்கியுள்ளது. சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் தனது பங்கு நிதியான ரூ. 300 கோடியைத் தராவிட்டால் இந்தத் திட்டத்தைக் கைவிடப் போவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மிரட்டியுள்ளதாம்.
நிதியைத் தருவற்கு சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கு அக்டோபர் 20ம் தேதி வரை கால அவகாசம் தந்துள்ளதாம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.
கடந்த 1998ம் ஆண்டு எண்ணூர் மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இது இழுபறியாகவே உள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு வரும் அனைத்து சரக்கு லாரிகளின் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தவும், சாலைகளை மேம்படுத்தி, துறைமுகத்திற்காக சரக்குகளை இயக்கும் சரக்கு வாகன நிலையங்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் இந்த சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை இது.
சென்னை துறைமுகத்துடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்தத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், இந்தத் திட்டத்திற்கு ரூ. 300 கோடி நிதியைத் (தற்போதைய மதிப்பீட்டின்படி) தர வேண்டும்.
இதுகுறித்து சமீபத்தில் டெல்லியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு வந்த சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக தலைமை பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 20ம் தேதிக்குள் பணத்தைக் கொடுத்தால் பணியைத் தொடருவதாகவும், இல்லாவிட்டால் இத்திட்டத்தை கைவிடப் போவதாகவும் அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் ரூ. 38 கோடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்குக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இதுகுறித்த தகவலை மத்திய கப்பல்துறை அமைச்சகத்திற்கு சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் அனுப்பிவைத்துள்ளது. அமைச்சகம் ஒப்புதல் தந்தவுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மத்திய கப்பல்துறை அமைச்சகம், தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications