ஸ்வைன்-இந்தியாவில் இதுவரை 396 பேர் பலி
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் ஒருவர் பலியானார். இதையடுத்து நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 165 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவில் 112, ஆந்திரா 42, குஜராத்தில் 36 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் இந்த நோய் மேலும் 140 பேருக்கு பரவியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 30 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தலா 22 பேர். மகாராஷ்டிரா 23, கேரளா 13, ஹரியானாவில் 8 பேருக்கும் இந்த நோய் பரவியுள்ளது.
மேலும் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த நோய் விடலை பருவத்தில் இருப்பவர்களுக்கம், ஆரோக்யமானவர்களுக்கும் அதிகம் பரவுவது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக்கு மெக்சிகோவில் மார்ச் 18 முதல் ஜூன் 1 வரையிலும், கனடாவில் ஏப்ரல் 16 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையிலும் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,525 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசலில் 1202 , அமெரிக்காவில் 982, அர்ஜென்டினாவில் 580 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது.