சுனாமி நிவாரணம்-வெள்ளை அறிக்கை கோரும் பாஜக
சென்னை: சுனாமி நிவாரணப் பணிகளில் கோடி கணக்கில் பண மோசடி நடந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி தமிழகத்தில் பேரழிவை உண்டாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏராளமானோர் நிதி உதவி அளித்தனர். ஆனால் அந்த நிதிகள் மக்களை சென்று சேரவில்லை.
தற்போது சுனாமி வந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் மக்கள் உதவியை எதிர்பார்க்கும் அவலநிலை தான் இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த இஆர்டி நிறுவனம் தென்னிந்திய திருச்சபைக்கு அனுப்பிய ரூ. 17 கோடியே 63 லட்சம் சுனாமி நிவாரண நிதியில் ரூ. 7.5 கோடி எங்கு போனது என்று தெரியவில்லை.
அதை சிலர் தங்களது சொந்த செலவுக்காக எடுத்து மோசடி செய்துள்ளனர். அவர்கள் வீடு, பங்களா, கார் என சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அதில் எஞ்சிய பணமும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை.
சுனாமி நிவாரணம் நிதியை மோசடி செய்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே வரவில்லை. இந்த நிவாரணப் பொருள்களையும், நிதி உதவிகளையும் அரசின் மூலமாக வழங்கியிருந்தால் இந்த கொள்ளை சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
இப்போது வெளிவந்திருக்கும் மோசடி கடுகளவுதான் என்று பொதுநல அமைப்புகள் கருதுகின்றன.
சுனாமி ஏற்பட்டதிலிருந்து பல்வேறு அமைப்புகள் உள்நாடு, மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரட்டிய நிதி எவ்வளவு? அது எவ்வாறு செலவிடப்பட்டது? என்பது குறித்து அரசு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications