விலங்கை கழட்டாத கைதி-மல்லுக்கட்டிய போலீஸ்
சென்னை: சென்னை நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த கைதியின் கைவிலங்கை போலீஸார் அவிழ்க்க முயன்ற போது அந்த கைதி மறுத்துவிட்டார். இதையடுத்து அவருடன் மல்லுக்கட்டிய போலீஸார் கட்டி புரண்டு ஒரு வழியாக கைவிலங்கை கழட்டினர்.
நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மகாலிங்கம் என்பவரை தர்மபுரி போலீஸார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்தனர். நேற்று அவரை சென்னை 5வது கூடுதல் செசன்சு தடா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
தீவிரவாதிகள் அல்லது முக்கிய வழக்குகளில் சிக்கியிருப்பவர்களை மட்டுமே போலீஸார் கைவிலங்குடன் அழைத்து வருவது வழக்கம். விசாரணை கைதிகளை கைவிலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரக்கூடாது.
ஆனால் போலீஸார் சில சமயங்களில் சில விசாரணை கைதிகளையும் கைவிலங்கிட்டு அழைத்து வருகின்றனர். நீதிமன்றத்துக்குள் நுழையும் முன் அவர்களைது கைவிலங்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.
அதேபோல் மகாலிங்கத்தின் கைவிலங்குகளை போலீஸார் கழட்ட முயன்றனர். ஆனால், மகாலிங்கம், நீதிபதியிடம் தான் கைவிலங்கிட்டு கூட்டி வருவதை காட்ட வேண்டும், போலீஸாரின் தவறை சுட்டிகாட்ட வேண்டும் என நினைத்து கைவிலங்கோடு நீதிமன்றத்துக்குள் நுழைந்துவிட்டார்.
அந்நேரம் நீதிபரம் சீட்டில் இல்லை. இதை பார்த்த போலீஸார் நீதிபதி வருவதற்கு முன் கழட்ட முயன்றனர். ஆனால், மகாலிங்கம் கைகளை இந்த பக்கம் அந்த பக்கம் என திருப்பி போலீஸாருக்கு போக்கு காட்டினார். இதையடுத்து போலீஸார் அவர் மீது பாய்ந்து கைவிலங்கை கழட்ட முயன்றனர்.
சுமார் 10 நிமிடத்துக்கு மேலாக கைதியுடன் கட்டி புரண்ட போலீஸார் இறுதியில் ஒரு வழியாக கைவிலங்கை கழட்டினர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications