கருணாநிதி செயல்திறன் அற்றவராக இருக்கிறாரா?-ஜெ
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கூட்டிய கூட்டங்களுக்கு தமிழக அரசுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா, இல்லையா?. அழைக்கப்பட்டிருந்தால் தமிழக அரசின் சார்பில் யாராவது கலந்து கொண்டார்களா?, கலந்து கொள்ளவில்லையெனில் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி 2007ம் ஆண்டு துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்றும், 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன என்றும் கேரள நீர்பாசனத் துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் 6.10.2009ம் தேதி அனுமதி அளித்துள்ள போது, கேரள அரசு ஆய்வுப்பணியை முன்னதாக எப்படி மேற்கொண்டிருக்க முடியும் என்று முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியை வகித்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு எதுவுமே தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா? அல்லது செயல் திறன் அற்றவராக இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக 29.11.2006 அன்று டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டினார். அதில் தமிழக அரசு கலந்து கொண்டதா என்று தெரியவில்லை.அந்த கூட்டத்தில் யாராவது கலந்து கொண்டிருந்தால் கேரள அரசின் புதிய அணைக்காக கருத்துருவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏதாவது தெரிவிக்கப்பட்டதா?
16.09.2009 அன்று மத்திய சுற்றுச்சூல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால் தமிழகத்தின் சார்பில் யாருமே கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பில், புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்காக பெரியாறு புலிகள் பாதுகாப்பு பகுதியில் நில அளவை மற்றும் ஆய்வு நடத்த அனுமதிப்பது குறித்து பரிந்துரைக்கப் பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாட்டுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையா? ஆம், எனில் தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கும் மத்திய கூட்டணி அரசில் திமுக அரசு ஏன் இன்னும் அங்கம் வகிக்கிறது.கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால் தமிழகத்தின் சார்பில் ஏன் யாரும் கலந்து கொள்ளவில்லை.
நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், தெரிந்து கொள்வதில் அக்கறை இல்லாமல் எல்லாமே சரியாக நடக்கிறது என்று கூறும் கருணாநிதிக்கு முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க என்ன உரிமை இருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications