சத்யம் நிறுவன ஊழியர் படுகொலை- சாக்குப் பையில் பிணம்
ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் ஊழியர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்குப் பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் அக்டோபர் 13ம் தேதி படுகொலை செய்யப்பட்டு உடல் சாக்குப் பையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட ஊழியரின் பெயர் எஸ்.சந்திரசேகர். இவர் ஹைடெக் சிட்டியில் உள்ள மகிந்திரா சத்யம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் படுகொலை செய்யப்பட்டு உடல் சாக்குப் பையில் கட்டப்பட்ட நிலையில், கர்வான் பகுதியில் உள்ள நகராட்சி வார்டு அலுவலகம் அருகே விடப்பட்டிருந்தது.
மெஹதிபுரம் அருகே உள்ள தல்லகடா என்ற இடத்தில், பகவன்தாஸ்பாக் பகுதியில் வசித்து வந்தார் சந்திரசேகர். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணமானது. இவரும், மனைவியும் மட்டும் வசித்து வந்தனர்.
சந்திரசேகர் குறித்து அவரது மனைவி அனுஷா கூறுகையில், அக்டோபர் 11ம் தேதி இரவு பத்தரை மணிக்கு இரண்டு பேர் வீட்டுக்கு வந்தனர். அவர்களை தனது நண்பர் என எனது கணவர் என்னிடம் தெரிவித்தார்.
பின்னர் அவர்களுடன் பஸ்ராவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அக்டோபர் 13ம் தேதி வந்து விடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் திரும்பி வரவில்லை.
ஏன் பஸ்ராவுக்கு எனது கணவர் அந்த இரண்டு பேருடன் கிளம்பிச் சென்றார் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை. அவர் கிளம்பிச் சென்றது முதலே என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் டிவிகளில் அடையாளம் தெரியாத ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. இதையடுத்து நான் பதட்டமடைந்தேன். எனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் போன் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து போலீஸில் புகார் செய்யச் சென்றபோது அவர்கள் கொல்லப்பட்ட உடலின் புகைப்படங்களை என்னிடம் காட்டினர். அது எனது கணவரின் உடல்தான் என்பதை நான் அடையாளம் காட்டினேன் என்றார்.
இந்தக் கொலை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications