ஒபாமாவுக்கு நோபல் பரிசு சரிதான்- சசி தரூர்
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டது பொருத்தமானதே என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க டிவி ஒன்றுக்கு தரூர் அளித்துள்ள பேட்டியில், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளார் ஒபாமா. மேலும், அமெரிக்காவின் இமேஜையும் அவர் மாற்றி அமைத்துள்ளார்.
நாங்கள் (இந்தியர்கள்) மகாத்மா காந்தியின் மண்ணைச் சேர்ந்தவர்கள். அகிம்சையைப் போதித்த அவருக்கு ஒருமுறை கூட நோபல் பரிசு தரப்படவில்லை. எனவே, சரியான நபருக்கு அந்த விருது கிடைக்காமல் போகக் கூடாது. உரிய நேரத்தில் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அந்த வகையில் ஒபாமாவுக்கு இந்த பரிசு பொருத்தமானதே.
நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி நோபல் பரிசைப் பெறலாம். அதேபோல நோபல் பரிசைப் பெற்ற பி்ன்னரும் கூட நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒபாமா விவகாரத்தை அப்படித்தான் நாம எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் தரூர்.