செல்போன்: காஷ்மீரில் 'ப்ரீ பெய்ட்'க்கு தடை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 'ப்ரீ பெய்ட்' செல்போன் இணைப்புகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
செல்போன்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுக்கவுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில்,
பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது காலம் 'ப்ரீ பெய்ட்' இணைப்புகளைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 'ப்ரீ பெய்ட்' இணைப்பு வைத்துள்ள இம்மாநில மக்கள் 'போஸ்ட் பெய்ட்' திட்டத்துக்கு மாறிக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
'ப்ரீ பெய்ட்' இணைப்புகளுக்கும் 'போஸ்ட் பெய்ட்' இணைப்புகளுக்கும் மிகுந்த அளவு வேறுபாடு உண்டு. 'ப்ரீ பெய்ட்' இணைப்புகளை தீவிரவாதிகள் அதிக அளவில் பயன்படுத்துவதால் இதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 'ப்ரீ பெய்ட்' இணைப்புகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் 'போஸ்ட் பெய்ட்' திட்டத்துக்கு மாறிக் கொள்ள வேண்டும்.
நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. ராணுவத்தினர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு மட்டுமே ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரூபாய் நோட்டுகள் எல்லை தாண்டி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன. இதைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அளவுக்கு இல்லை. ஒரு லட்சம் நோட்டுகளில் ஒரு கள்ள நோட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றார் சிதம்பரம்.