மமதா பானர்ஜி காரை துரத்தியது டிவி நிருபர்கள்!
கொல்கத்தா: ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியிடம் பேட்டி வாங்குவதற்காக அவரது பாதுகாப்பு வரிசைக்குள் புகுந்து, காரை மோதுவது போல பீதி ஏற்படுத்திய வங்காள மொழி டிவி சானலின் நிருபர்கள் மீது போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து கைது செய்தனர்.
ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, பிரபல ஓவியர் சுவோபிரசன்னா என்பவரின் வீட்டுக்குப் போய் விட்டு நள்ளிரவைத் தாண்டி தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று மமதாவின் பாதுகாப்பு கார்களுக்கு உள்ளே புகுந்து அவரது காருடன் மோதுவது போல வந்தது.
இதையடுத்து போலீஸில் திரினமூல் காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநில போலீஸார் மீதும், மாநில அரசின் மீதும் பாய்ந்து பேட்டி அளித்தார் மமதா பானர்ஜி.
ஆனால் அந்த மர்மக் காரில் இருந்தவர்கள் டிவி நிருபர்கள் என பின்னர் தெரிய வந்தது. அவரிடம் பேட்டி காண்பதற்காக காரில் துரத்தியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து 24 பர்கானா மாவட்ட எஸ்.பி. ராகுல் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறுகையில், சால்ட்லேக் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கார் அமைச்சரை துரத்தியுள்ளது. அந்தக் காரை நிறுத்தி விசாரித்தபோது அது சோபிஸ் கோந்தா என்ற வங்காள மொழி டிவி சானலுக்குரியது என்று தெரிய வந்தது. அதில் பயணித்தவர்கள் நிருபர்கள், வீடியோகிராபர்.
மத்திய அமைச்சரிடம் பேட்டி வாங்குவதற்காக இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து திரினமூல் காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications