திருச்செந்தூர் தொகுதிக்கு டிசம்பரில் இடைத்தேர்தல்?
சென்னை: திருச்செந்தூர் தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
திருச்செந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.
தேர்தல் விதிகளின்படி காலியாக இருக்கும் இடங்களுக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். சமீபத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தபோதும், வட மாநிலங்களில் இடைத் தேர்தல் நடந்தபோதும் திருச்செந்தூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தல் கமிஷன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந் நிலையில் சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடம் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு,
திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னமும் 1 சதவீத வாக்காளர்களுக்குத்தான் அடையாள அட்டை கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.
இந் நிலையில் திருச்செந்தூர் தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. தேர்தல் தேதியை அடுத்த மாதம் தேர்தல் ஆணையம அறிவிக்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.