சின்னசாமி சொன்னாரு.. நான் வேண்டான்னு சொல்லிட்டேன்-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு தமிழ்நாட்டிற்கு அறிமுகமே இல்லாத 'முத்துவேலர்-அஞ்சுகம் அம்மாள்' பெயர்களை சூட்டவும், அந்த வளாகத்திற்குள் மேற்படி இருவரின் சிலைகளை நிறுவிடவும் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும், அங்கு பெருந் தலைவர் காமராஜர், தியாகி கக்கன்ஜி நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தேன்.
ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு முத்துவேலர்-அஞ்சுகம் அம்மாள் பெயர்களை சூட்டும் திட்டம் நீண்ட காலமாக இருந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.
முத்துவேலர்-அஞ்சுகம் அம்மாள் என்று பெயர் சூட்டப்படுவதாகத் தான் ராதாபுரம் ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையும் தனக்கு சொந்தமான இடத்தை, ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவுக்கு அதனால் தான் அளித்திருக்கிறது என்பதை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை மாநகரின் பிரதான சாலையில் தனக்குத் தானே சிலையை வைத்துக் கொண்டதையும், பல மாவட்டங்களில் உள்ள நகர்களுக்கும் பொன் விழா வளைவுகளுக்கும் தனது பெயரை வைத்துக் கொண்டதையும் "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று தன் பெயரை தமிழக அரசின் திட்டத்திற்கு வைத்துக் கொண்டதையும் மறந்துவிட்டு எனது அறிக்கையை புரிந்து கொள்ளாமல் சுழற் கோப்பைக்கும், சமுதாய நலக் கூடங்களுக்கும் என் பெயரை வைத்ததாக சட்டமன்ற நடவடிக்கை குறிப்புகளை புரட்டிப் பார்த்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பது அவருடைய அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.
5.2.1992 அன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் வி.கே. சின்னசாமி பெரியார் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு போக்குவரத்துக் கழகம் அமைக்கப்படவேண்டும் என்றும், அந்தப் போக்குவரத்துக் கழகத்திற்கு எனது தாயாரின் பெயரை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த நான் "மறைந்த எனது தாயார் பெயரில் ஒரு போக்குவரத்துக் கழகம் பெயரிடப்படுவதை நான் விரும்பவில்லை" என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உடனே தெரிவித்தேன். சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளை புரட்டிப் பார்க்கும்போது இது கருணாநிதியின் கண்களுக்கு தென்படவில்லை போலும்!.
'தமிழ்நாட்டில் நடப்பதே காமராஜர் ஆட்சி' என்று காங்கிரஸ்காரர்களிடம் கூறும் கருணாநிதிக்கு ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந் தலைவர் காமராஜரின் பெயரை வைக்கவும், அங்கு காமராஜர் தியாகி கக்கன்ஜி சிலைகளை நிறுவவும் மனமில்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
ராதாபுரம் பகுதி மக்களின் கோரிக்கையை அதிமுக நிறைவேற்றி வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications