ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீண்டும் தாக்குதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் கொடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று ராமேசுவரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இரவு 11 மணியளவில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 6 சிறிய கப்பல்களில் வந்த 25க்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து மீனவர்கள் வலைகளை அப்புறப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
அதற்குள் மீனவர்களின் படகுகளுக்குள் தாவிய கடற்படையினர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை அறுத்து எறிந்தனர்.
மீன் பிடி சாதனங்களையும் கடலுக்குள் தூக்கி வீசினர். அகஸ்டின் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த 4 பேரையும் கடற்படையினர் சரமாரியாகத் தாக்கிவிட்டு அனைவரையும் துரத்தி அடித்தனர்.
இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து போலீசில் புகார் தந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த 4 மீனவர்களும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவிட்டு சமீபத்தில் தான் கடலுக்குத் திரும்பினர்.
இந் நிலையில் திமுக-காங்கிரஸ் குழு இலங்கையில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீனவர்களை கடற்படையினர் தாக்கினர். இப்போது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.