இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை!
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தி.நகர் உள்ளிட்ட 45 முக்கிய இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், 24 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பண்டிகைக் கால குற்றவாளிகளை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் 114 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
58 குற்றத்தடுப்பு தனிப்படை போலீசாரும் , 171 ஊர்க்காவல் படையினரும் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நகைபறிப்பு சம்பவங்களை தடுப்பதற்கு 36 இடங்களில் போலீசாரின் சிறப்பு ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன அத்துடன் சென்னை முழுவதும் 65 முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய 685 பேருக்கு இதுவரை லைசன்ஸ் வழங்கப் பட்டுள்ளது. விண்ணப்பித்த மற்றவர்களுக்கும் இன்று லைசன்ஸ் வழங்கப்படும்.
சாலையோரங்களில் பட்டாசுகள் விற்பனை செய்யக் கூடாது. மேலும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை யாரும் பட்டாசுகள் வெடிக்க கூடாது. இந்த விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீதும், லைசன்ஸ் பெறாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீதும் சடடப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கடந்த ஒரு வாரத்தில் 88 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 77 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.1.07 கோடி மதிப்புள்ள 434 சவரன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்கள், 40 செல் போன்கள், 4 லேப்டாப்கள், 13 இருசக்கர வானகங்கள், 6 கார்கள், 1 ஆட்டோ ஆகியவை மீட்கப்பட்டன.இவை உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 37 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். நில மோசடி, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட 116 பேரை கடந்த 2 மாதத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று ரூ.18 கோடி அளவிற்கு சுனாமி நிதி மோசடியில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்ட பெனடிக்கா, ராபர்ட் சுனில் ஆகிய இருவரும் அடக்கம்.
நடிகர்கள் மீதான புகார்...
தங்களை அவதூறாக பேசியதாக பத்திரிக்கையாளர்கள் மீது நடிகர், நடிகைகள் கொடுத்த புகார் நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றார் அவர்.