நாள் 1: 2400 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர் - டி.ஆர்.பாலு
சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து நேற்று 2400 தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு தலைமையின திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு இலங்கை சென்று திரும்பி வந்தது. இந்தக் குழுவின் வருகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, வியாழக்கிழமையிலிருந்து (நேற்று) 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய முதல் நாள் நிலவரம் குறித்து டி.ஆர்.பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலையினை நேரில் கண்டறிய முதல்வர் கருணாநிதி கோரிக்கையினை ஏற்று சென்ற தமிழக எம்.பி.க்கள் குழு கடந்த 10 முதல் 14-ம் தேதி வரை இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலையை கண்டு, இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் விளக்கினர்.
அதற்கு அவர், இப்பிரச்சினைக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி முதல்வர் கருணாநிதியிடம் நேரில் எடுத்துரைக்கப்பட்டது. அதோடு இக்குழுவின் விளக்க அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, நேற்று முகாம்களில் இருந்த 2,400 தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு குடியேறுவதற்காக பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களது உடனடி தேவைகளுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications