For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயல் வீரர்களே புறப்படுங்கள்!-ஜெயலலிதா

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் மனதில் இன்னமும் மகத்தான சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, மறைந்தும் மறக்க முடியாத மாமனிதராய் மக்கள் நினைவிலே நிழலாடிக் கொண்டிருக்கின்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாளை 38வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நன்னாளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாக தீபங்களையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நம் அரசியல் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட கழக உடன்பிறப்புகளையும், கழகப் பணியாற்றும் போது விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த கழகத் தொண்டர்களையும் நினைவு கூர்கிறேன்.

கடந்த கால வரலாற்றினையும், எதிர்கால இலட்சிய இலக்கினையும் நமக்கு நினைவூட்டிடும் நாள்தான் கழக துவக்கநாள்!.

ஆட்சிக் கலைப்புரீதியில் மலைபோல வந்த சோதனை பனிபோல் விலகியது. தர்மம் தலைகாக்கும் என்ற வரிகள் புரட்சித் தலைவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தன! மீண்டும் புரட்சித்தலைவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்!.

எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்திற்கு, எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயப் பண்பாளருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கைக் கண்டு எதிர் அணியினர் திகைத்துப் போயினர்!.

பத்திரிகை உலகம் வியந்தது! கருணாநிதியின் பேச்சைக்கேட்டு அவசரப்பட்டு முடிவு எடுத்ததற்காக அன்றைய காங்கிரஸ் மத்திய அரசு வருந்தியது.

வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லி, அனைத்து வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்து சேருமாறு பார்த்துக் கொள்ளக்கூடிய வலிமை, கழகச் செயல் வீரர்கள், வீராங்கனைகளாகிய உங்களிடம்தான் இருக்கிறது. இந்தப் பணியை நிச்சயம் திறம்பட செய்து முடிப்பீர்கள்!.

எத்தனைத் தடைகள் எதிர்வந்தாலும் அவற்றை வகையாய் தகர்த்தெறியும் திறன் படைத்த, சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வல்லமை படைத்த கழக உடன்பிறப்புகளே! எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைத்திட புறப்படுங்கள்!.

இந்த ஆண்டு தீபாவளித் திருநாளும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் துவங்கிய நாளும் ஒரே நாளில் வருவதால், இரண்டையும் ஒருசேர கொண்டாடும் ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்த நன்னாளில், தமிழ்நாட்டு உரிமைகளை பெற்றிட, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றிட, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்திட, ஏழைகளை ஏற்றிவிடும் ஏணிப்படியாக விளங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைக்க நாம் உறுதி ஏற்போம்!.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X