ரூ.9 கோடி போதை பொருள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.9 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு சரக்கு பொட்டகம் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையிலிருந்து மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி வந்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சரக்கு பொட்டகங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு சரக்குப் பொட்டகத்தில் மற்ற பொருட்களுக்கு நடுவே கேட்டமைன் என்ற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.9 கோடியாகும்.
இந்த கடத்தல் தொடர்பாக ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த போதைப் பொருள் தூத்துக்குடிக்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. கடத்தல் பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.