தம்பதி கொலை-தலைமறைவான பெண் கைது
சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த அனந்தகிருஷ்ணன் (65), யமுனாபாய் (63) தம்பதி கடந்த புத்தாண்டு தினத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
வீ்ட்டில் அழுகிய நிலையில் இவர்களது உடல்கள் மீட்கப்பட்டன இவர்களுக்கு வாரிசு இல்லை.
ரயில்வேயில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அனந்தகிருஷ்ணன் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றிய சங்கீதா என்ற பெண் அடிக்கடி அனந்தகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து செல்வார்.
அனந்தகிருஷ்ணன், யமுனாபாய் தம்பதி தனியே வசித்து வருவதை அறிந்து கொண்ட சங்கீதா அவர்களை கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடிக்கக் திட்டமிட்டார்.
தனது 4 நண்பர்கள் துணையுடன் தம்பதியைக் கொன்று 45 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்தார்.
இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதா உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
இதில் சங்கீதா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தினமும் குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்த இவர் திடீரென தலைமறைவானார்.
இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இந் நிலையில் மாம்பலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் சங்கீதா சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.