தமிழகம் முழுவதும் தீபாவளி- அசைவம் இல்லாமல் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமையில் தீபாவளி வந்ததால் அசைவ சாப்பாடு இல்லாமல் மக்கள் தீபாவளியைக் கொண்டாடினர். இதனால் ஆட்டுக் கறி, கோழிக்கறி உள்ளிட்டவற்றின் விற்பனை மிக மந்தமாக இருந்தது.
கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குப் பின்னர் தீபாவளிப் பண்டிகை இந்த முறை புரட்டாசி மாதத்தில் வந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளியை மக்கள் வழக்கமான உற்சாகத்தோடு புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் சாப்பிட்டு, கோவில்களுக்குச் சென்று கொண்டாடினர்.
பள்ளிப்பட்டில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பட்டாசு விபத்து குறித்துத் தகவல் வந்தால் உடனடியாக செல்லும் வகையில் தீயணைப்புப் படையினரும் உஷார் நிலையில் இருந்தனர்.
புரட்டாசி சனிக்கிழமையில் தீபாவளி வந்ததால், அசைவப் பிரியர்கள் தட்டுத் தடுமாறிப் போய் விட்டனர். நேற்று கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவை சுத்தமாக விற்பனையாகவில்லை. மிக மிக மந்தமான விற்பனையே இருந்தது. நாள், கிழமை பார்க்காத சிலர் மட்டுமே அசைவம் வாங்கினர்.
தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அன்றும் அசைவம் விற்கவில்லை. நேற்றும் இல்லை. இந்த நிலையில் இன்று மக்கள் பெருமளவில் அசைவம் வாங்க கடைகளில் குவிந்துள்ளனர்.