பட்டாசு சத்தம்-பாகனை மிதித்து கொன்ற யானை
காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் பட்டாசு சத்தம் கேட்டதால் மிரண்டு போன கோவில் யானை பாகனை மிதித்துக் கொன்றது.
இந்தக் கோவிலில் காமாட்சி, ஜெயந்தி, அப்பு ஆகிய 3 யானைகள் உள்ளன. யானைகளை புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூரை சேர்ந்த பூமிநாதன் (40) என்பவர் பராமரித்து வந்தார்.
தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களாக பட்டாசு சத்தத்தால் யானைகள் தூங்காமல் தவித்தன. அதில் 45 வயதாகும் காமாட்சி என்ற யானை நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வலது புறக்கண் சற்று பார்வை குறைந்துள்ளது.
இந் நிலையில் தீபாவளிக்காக காலை 7 மணிக்குள் யானைகளை குளிப்பாட்டி அலங்கரிக்க வேண்டி இருந்ததால் பூமிநாதன் யானைகளை சுத்தம் செய்ய முயன்றார்.
அப்போதும் பட்டாசு சத்தம் கேட்டதால் மிரண்டுபோன காமாட்சி என்ற யானை பூமிநாதனை தும்பிக்கையால் தூக்கி சுவரில் அடித்து கீழே போட்டு மிதித்தது. இதில் அவர் அதே இடத்தில் பலியானார்.
தகவல் அறிந்து ஓடி வந்த தலைமை பாகன் குணசீலனை வரவழைத்து மிரண்ட யானைகளை அமைதிப்படுத்தினர். இறந்த பூமிநாதனுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.