பாகிஸ்தான் நிலைமை படுமோசம்- இந்தியா
டெல்லி: பாகிஸ்தானில் நிலைமை மோசமாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
வசீ்ர்ஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் வசமிருந்த இரு முக்கிய பகுதிகளைக் கைப்பற்ற தரைப்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹக்கீமுல்லா மசூத் தலைமையிலான தலிபான் இயக்கத்தினர் மீது, ராணுவத்தினர் சனிக்கிழமை தாக்குதலைத் தொடுத்தது. 28,000 வீரர்கள், போர் விமானங்கள், டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 60 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளும் அவர்கள் மீது எதிர்தாக்குதல் நடத்தி வருவதால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களில் பாகிஸ்தானின் எப்-16 வகை போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி வருகின்றன. ஹெலிகாப்டர் மூலமும் குண்டு வீசி வருகின்றனர்.
தலிபான்கள் பிடியில் உள்ள மகீன், லடா, கோத்காய் ஆகிய நகரங்களை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகின்றனர் ராணுவ வீரர்கள்.
இதனால் அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பி ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் பதுங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆப்கானிஸ்தானுக்குள் வந்து விடாமல் தடுக்க எதிர் முனையில் அங்குள்ள அமெரிக்க படைகளும் தாக்குதலை தொடங்கியுள்ளன.
சண்டை நடக்கும் பகுதியில் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இரு தரப்பு சண்டையிலும் சிக்கி அவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பீதியில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இதுவரை 80 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி உள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் கியானி கூறுகையில், 10,000 தலிபான் தீவிரவாதிகளை, 28,000 பேர் கொண்ட ராணுவப் படையினர் சுற்றிவளைத்து தாக்கி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதுவரை 10,000 குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்றார்.
இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி கூறுகையில், பாகிஸ்தானில் தீவிரவாதம் படு வேகமாக பரவி வருகிறது. தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து வரும் எத்தகைய மிரட்டலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.
நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்படும் எத்தகைய மிரட்டலையும் சந்திக்கும் வகையில் நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
அந்த வகையில் பாகிஸ்தானிலிருந்து, தலிபான்கள் மூலம் வரும் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் நிலையில் இந்தியா உள்ளது என்றார் அந்தோணி.