அரசு பஸ்களிலும் கூடுதல் கட்டணம்- பயணிகள் பெரும் அவதி
சென்னை: தனியார் ஆம்னி பஸ்களில்தான் கட்டணக் கொள்ளையடிக்கின்றனர் என்றால், அரசு பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள், விடுமுறைக் காலங்களில் ரயில்கள், அரசு பஸ்களில் இடம் கிடைக்காத நிலையில், தங்களிடம் வரும் பயணிகளிடம் தனியார் பஸ்கள் பல மடங்கு கட்டணம் வசூலிப்பது வழக்கமாகவே உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என காவல்துறையும், அரசுப் போக்குவரத்துத் துறையும் கடுமையான எச்சரிக்கை விடுது வழக்கம். ஆனால் இதுவரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து யாரிடமும் பதில் இல்லை.
ஆம்னி பஸ்காரர்கள் வழக்கம் போலவே ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளையடித்துக் கொண்டுதான் உள்ளனர். அரசுத் துறைகளும் எச்சரிக்கை விடுத்தபடிதான் உள்ளனர். மக்களும் பணத்தை அழுது கொண்டுதான் உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையின்போது அரசு பஸ்களிலேயே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
முக்கிய நகரங்களில் அரசு பஸ் கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
உதாரணத்திற்கு, சென்னை -வேலூர் இடையே சாதாரண கட்டணம் ரூ.46. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ரூ.56 வசூலிக்கப்பட்டது. தீபாவளி முடிந்து ஊர் திரும்புவோர் கூட்டம் அதிகமாக உள்ள ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்டணம் ரூ.60 ஆக உயர்ந்தது.
சென்னை-ஒசூர் இடையில் கடந்த வாரம் ரூ.105 ஆக இருந்த கட்டணம் தீபாவளியின்போது ரூ.125 என உயர்ந்தது. முன்பதிவுக் கட்டணம் ரூ.10, எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.10 என்று நடத்துநர் அதற்கு விளக்கம் கூறியுள்ளார்.
ஆனால் இந்த பஸ்கள் அதி வேகமாக போகவே இல்லை. வழக்கமான சாதாரண பஸ்களைப் போலவே பல இடங்களிலும் இந்த பஸ்களும் நின்றுதான் சென்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ்களில் ரூ.110 முதல் ரூ.150 வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் கூறுகின்றனர்.
8 மணிக்கே நைட் பஸ் சார்ஜ் ...
மதுரையில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பஸ்களில் ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இரவு நேர உள்ளூர் பஸ்களில் இரவு 8 மணிக்கே இரவு நேரத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையில் இருந்து உதகைக்கு ரூ.8, சேலத்துக்கு ரூ.15, மதுரை, தூத்துக்குடி, நெல்லைக்கு தலா ரூ.25 என கட்டணம் உயர்த்தப்பட்டது. ஈரோடுக்கு ரூ.3, நாமக்கல்லுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
திருச்சியிலிருந்து கரூருக்கு சாதாரணப் பேருந்துகளில் ரூ. 23-ம், விரைவுப் பேருந்துகளில் ரூ. 27-ம் வசூலிப்பது வழக்கம். ஆனால், தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் ரூ.34 வசூலிக்கப்பட்டது.
திருச்சியிலிருந்து மதுரைக்கு சாதாரண பேருந்துகளில் வழக்கமாக ரூ. 35தான் கட்டணம். ஆனால், வெள்ளிக்கிழமை காலை திருச்சியிலிருந்து மதுரை சென்ற சாதாரணப் பேருந்துகளில் ரூ. 40-ம், மற்ற பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட ரூ. 5 முதல் ரூ. 10 வரை கூடுதலாகவும் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இடையில் இருக்கும் ஊர்களில் ஏறிய பயணிகளிடமும், முழு பயண தூரத்துக்கான கட்டணத்தையே வசூலித்துள்ளனர்.
அரசே இப்படி கொள்ளையடித்தால் மக்கள் எங்குதான் போய் முறையிடுவது..