ரயில் டிக்கெட்டுகள் மோசடி-38 புரோக்கர்கள் கைது
ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் போது டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், புரோக்கர்கள் வேறு பெயர்களில் ஏராளமான டிக்கெட்டுகளை வாங்கி குவித்து விடுகின்றனர். இவற்றை பின்னர் அதிக கட்டணத்திற்கு, ஆட்களுக்கேற்ப பெயர்களை மாற்றி விற்கின்றனர். இதனால் அப்பாவி பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
இந்த டிக்கெட்கள் அனைத்துமே ஆன்லைன் புக்கிங் மூலம் புக் செய்யப்படுகின்றன. இதனால்தான் ரயில்களில் முன்பதிவு தொடங்கும் நாளன்று சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்பனையாகி விடுகின்றன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ரயில்களில் சோதனை நடத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக 19 அதிகாரிகள் கொண்ட குழுவினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் பயணிகளிடம் உள்ள டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது முறைகேடான பயணம், டிக்கெட் மாற்றம் உள்பட 577 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.2.78 லட்சம் வசூலிக்கப்பட்டது.
பயணிகளிடம் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற புரோக்கர் கே.ஜி.ஸ்ரீதர் மற்றும் அவரது கூட்டாளி சுரேஷ் ஆகியோர் பிடிபட்டனர். பிடிபட்ட புரோக்கர்கள் ரூ.538 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்றது கண்டு பிடிக்கப்பட்டது. புரோக்கர்கள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே போல், சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மதுரை முருகன் டிராவல்சை சேர்ந்த புரோக்கர் திருப்பதியிடம் ரூ.53 ஆயிரத்து 908 ரூபாய் மதிப்புள்ள வெற்று டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இதையும் சேர்த்து இந்த மாதத்தில் மட்டும் 38 புரோக்கர்கள் பிடிபட்டுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகளின் அடையாளத்தையும், அவர்கள் முன்பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரி மற்றும் செல்போன் எண்ணையும் பரிசோதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அவ்வாறு சரிபார்க்கும் போது விவரங்கள் முரண்பாடாக இருக்குமானால் சம்பந்தப்பட்ட பயணிகள் மீது ரயில்வே சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.