சங்கரன்கோவில் மர்ம காய்ச்சல்-11 பேர் பாதிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் ஒருவித மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தினமும் காலை, மாலை நேரங்களில் 2500 முதல் 3000 பேர் வரையில் வெளி்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இம்மர்ம காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இக்கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.