ஐபி அதிகாரியின் போக்கால் அதிருப்தி - ரா அதிகாரிகள் லீவு போட்டு எதிர்ப்பு
டெல்லி: ரா அமைப்பின் ஆறு மூத்த அதிகாரிகளை புறம் தள்ளி விட்டு, ஐபி எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோவில் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரியை, ரா அமைப்புக்கு நியமித்ததைக் கண்டித்து, அந்த ஆறு ரா அதிகாரிகளும் விடுப்பு போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
விடுப்பில் சென்றுள்ள ஆறு ரா அதிகாரிகளும் கூடுதல் செயலாளர்கள் ஆவர்.
சமீபத்தில் ரா அமைப்பின் சிறப்புச் செயலாளராக மணிப்பூர் பிரிவைச் சேர்ந்த 1975ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.பி. மாத்தூரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இவுக்கு சிறப்பு டிஜிபி அந்தஸ்து கொடுத்து ரா அமைப்பின் சிறப்புச் செயலாளராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இது சர்ச்சையைக் கிளப்பி விட்டது. ரா அமைப்பில் உள்ள ஆறு மூத்த அதிகாரிகள், மாத்தூரை விட சீனியர்கள். தங்களைப் புறம் தள்ளி விட்டு மாத்தூரை நியமித்ததை எதிர்த்து அவர்கள் ஆறு பேரும் ஒட்டுமொத்தமாக விடுப்பில் போய் விட்டனர்.
இதனால் ரா அமைப்பில் சலசலப்பு எழுந்துள்ளது.