மதுரையில் 80 ஏக்கரில் தீவிரவாத ஒழிப்பு படை முகாம்
மதுரை: தென் மாவட்டங்களில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும், முக்கிய இடங்கள், கோயில்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உதவியாக மதுரையில் 80 ஏக்கரில் தீவிரவாத ஒழிப்பு படைப் பிரிவு அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் தர்மபுரி மற்றும் தேனி மாவட்டம் கொடைக்கானல், முருகமலைப்பகுதிகளில் தமிழ் தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்தது கண்டறியப்பட்டது.
கடந்தாண்டு போலீசாரின் அதிரடி வேட்டையில் நக்சலைட்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மறைமுகமாக செயல்படுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. மத்திய உளவுத்துறை அறிவுரைப்படி தொடர்ந்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் மத்திய தீவிரவாத ஒழிப்பு படை முகாம் அமைகிறது. இதற்காக 80 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் ஒரு பிரிவைச் சேர்ந்த 45 வீரர்களை கொண்ட பட்டாலியன் இதில் இடம்பெறுகிறது. தற்போது குன்னூரில் பயிற்சி பெறும் இவர்கள், இரு மாதங்களில் மதுரை வர உள்ளனர்.
விரைவில் கருப்பாயூரணி பகுதியில் தற்காலிக முகாம் அமைக்க உள்ளதாக இப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.