வெயிலில் தகிக்கும் தமிழகம்-தாமதமாகும் வட கிழக்குப் பருவ மழை
சென்னை: வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தொடங்கும் வட கிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு பெய்யத் தவறியுள்ளது. ஒரு வாரத்திற்கு மழையை எதிர்பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பெருமளவு மழையை தருவது வடகிழக்கு பருவமழை. வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் ஆகும். தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு பெய்தது. ஆனால் சென்னை போன்ற வட மாவட்டங்களில் அந்த அளவுக்கு பலன் இல்லை.
வழக்கமாக தென்மேற்கு பருவ மழையினால் சென்னைக்கு பெருமளவில் மழை இருக்காது. ஜுலை மாதம் முதல் வெயில் அளவு குறைந்து மக்கள் நல்லமுறையில் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ணநிலை இருக்கும்.
ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக உள்ளது. கோடை காலம் போல வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. காலையிலேயே சுள்ளென்று வெயில் ஆரம்பித்து விடுகிறது. மாலை வரை வெயில் ஓய்வதில்லை.
சமீப நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் இரவில் லேசான பனியும் கொட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தொடங்கும் வட கிழக்குப் பருவ மழை வரவில்லை.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
வடகிழக்கு பருவமழையின்போது சராசரியாக தமிழ்நாட்டுக்கு 43.5 செ.மீ.மழை கிடைக்கும். சென்னையில் 73 செ.மீ.மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் சராசரியாக 32 செ.மீ.மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழையில் பெரும்பாலும் கடலோர மாவட்டங்கள் தான் அதிக பயன் அடையும்.
வடகிழக்கு பரும மழை சராசரியாக அக்டோபர் மாதம் 20ம் தேதி தொடங்கும். அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னதாக 7 நாள், அல்லது 20ம் தேதிக்கு பிறகு 7 நாள் மழை தொடங்கினால் அது வழக்கம்தான். எனவே வடகிழக்கு பருவமழை இப்போதும் தாமதமாகி விட்டது என்று சொல்லி விட முடியாது. இன்னும் 3 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சொல்லமுடியாது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 22ம் தேதி தொடங்கியது. 1915ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி தான் தொடங்கியது என்றார்.