மாஜி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா-மனைவிக்கு அரிவாள் வெட்டு

ராஜாவால் முன்பு கடத்தப்பட்ட சிவபாலன் உள்ளிட்டோர் தான் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியின் மகன் தான் ராஜா. இவரும் திமுக அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார்.
ஆனால், பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். பெருந்துறையை சேர்ந்த அடுத்த பழனிச்சாமி (65), அவரது மனைவி மலர்விழி (45) மகன் சிவபாலன் (28) ஆகியோரை கடத்தி நிலத்தை அபகரிக்க முயன்றார் ராஜா.
இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இவரும் இவரது அடியாட்களான சில திமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவிலில் உள்ள இவரது வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் ராஜா, அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோரை அரிவாளால் வெட்டியது.
இதில் ராஜாவுக்கு கை, தோள் பட்டை ஆகிய இடங்களிலும், அவரது மனைவிக்கு கையிலும் வெட்டு விழுந்தது.
சத்தம் கேட்டு டிரைவரும், உதவியாளரும் ஓடி வரவே அக் கும்பல் தப்பியோடியது. இதில் 2 பேரை டிரைவரும் உதவியாளரும் விரட்டிப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
பிடிபட்டவர்களில் ஒருவர் ராஜா மீது கடத்தல் புகார் கூறிய சிவபாலன் எனத் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட இருவரும் காஞ்சிகோவில் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சிவபாலனுடன் வந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வெட்டுப்பட்ட ராஜா, உமா மகேஸ்வரியும் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை-திமுக வட்ட செயலாளர் கொலை:
இதற்கிடையே சென்னை புதுவண்ணாரப்பேட்டை 5வது வட்ட திமுக செயலாளர் சண்முகம் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த சண்முகத்துக்கு (38) தொழில்ரீதியில் பலருடன் மோதல் இருந்து வந்தது.
இந் நிலையில் சண்முகம் நேற்றிரவு பைக்கில் வண்ணாரபேட்டை மாதா கோவில் தெருவில் வந்த போது 6 பேர் அவரை வழிமறித்து வீச்சரிவாள்களால் வெட்டினர்.
இதில் சண்முகத்தின் தலை மார்பு, கழுத்து என 30 இடங்களில் வெட்டு விழுந்தது. சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் குமார் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications