கடலில் தத்தளித்த 78 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தோனேசியாவில் அடைக்கலம்
ஜகார்த்தா: நடுக் கடலில் தத்தளித்த 78 தமிழர்களுக்கு இந்தோனேசிய அரசு தற்காலிக புகலிடம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஐந்து பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட 78 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழு ஒன்று படகில் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்தோனேசிய பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால், அவர்கள் உதவி கோரி ஆஸ்திரேலியாவுக்கு தகவல் அனுப்பினர்.
இதையடுத்து அங்கு ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் விரைந்தது. இந்தோனேசிய கடற்பகுதியில் தமிழர்கள் படகு இருந்ததால் யார் அவர்களைப் பொறுப்பேற்பது என்பதில் இரு நாடுகளுககும் இடையே குழப்பம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் மற்றும் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதன் இறுதியில், இந்தோனேசியாவில் 78 தமிழர்களுக்கும் தற்காலிக புகலிடம் அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மனிதாபிமான நோக்கிலும், பாதுகாப்பு கருதியும், படகில் தத்தளித்துக் கொண்டிருக்கும் 78 பேரையும் இந்தோனேசியாவின் மெரெக் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லுமாறு அதிபர் சுசிலோ உத்தரவிட்டுள்ளதாக ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் 78 தமிழர்களும் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவார்கள். அவர்களை பொறுப்பேற்க யாரேனும் சர்வதேச அமைப்புகள் முன்வரும் வரை அவர்கள் இந்தோனேசியாவிலேயே வைத்து பராமரிக்கப்படுவர் என்றும் ஸ்மித் கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோல வரும் அகதிகளைக் கையாளுவது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
255 தமிழர்களின் நிலை என்ன...
இந்த நிலையில், ஏற்கனவே ஒரு படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்று தற்போது இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 255 இலங்கை தமிழர்களை அரசியல் புகலிடம் கோருபவர்களாக அங்கீகரிக்கும் பொருட்டு, ஐ.நா. சபையின் அகதிகள் உரிமை அமைப்பை கோரவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.