For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழல்-அமைச்சர் ராஜா அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்

Google Oneindia Tamil News

Raja
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு சில தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று மாலை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந் நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள சஞ்சார் பவன் கட்டத்தி்ல் உள்ள அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட் நடத்தி வருகிறது.

மேலும் சில தொலைத் தொடர்பு அலுவலகங்களிலும் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் 2007ம் ஆண்டில் 8 புதிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 4.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ஒதுக்கப்பட்டது.

இதற்காக மார்க்கெட் விலையை விட மிகக் குறைவாக ரூ. Rs 1,651 கோடி மட்டுமே லைசென்ஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டது. விலையைக் குறைத்து அந்த நிறுவனங்களுக்கு உதவ ராசா பெரும் ஊழல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

மேலும் இந்தியாவில் தனது கிளையைக் கூட ஆரம்பிக்காத ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் சர்வீஸஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது.

இதை வாங்கிய அந்த நிறுவனங்கள் அடுத்த சில நாட்களிலேயே அதை மிகக் கூடுதலான விலைக்கு பிற நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன.

இதனால் அலைவரிசைக்கு இவ்வளவு விலை தர மற்ற நிறுவனங்கள் தயாராக இருக்கும்போது, அதை அரசே ஏன் கூடுதல் விலைக்கு விற்கவில்லை, ஏன் மார்க்கெட் விலையை விட குறைவாக இந்த நிறுவனங்களுக்கு விற்றது என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால், மத்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் விதிப்படி தான் (யார் முதலில் அலைவரிசை கேட்டு விண்ணப்பிக்கிறார்களோ, அவர்களுக்கே முதலில் அதை ஒதுக்க வேண்டும் என்ற விதி) அலைவரிசை ஒதுக்கப்பட்டதாக தொலைத் தொடர்புத்துறையும் அதன் அமைச்சர் ராசாவும் விளக்கம் தந்தனர்.

இந்த விவகாரத்தி்ல் திமுக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அமைதி காத்தது. மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த பி்ன் ராசாவுக்கு அந்தத் துறையை ஒதுக்க பிரதமர் மன்மோகன் சிங் யோசித்ததாகவும், இதனால் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனாலும் மீண்டும் ராசாவே அந்தத் துறைக்கு அமைச்சராக்கப்பட்டார்.

இந் நிலையில் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்த மத்திய விஜிலென்ஸ் கமிஷன், இது குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது.

மேலும் மத்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் விதிப்படிதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது என்ற அமைச்சரின் விளக்கத்தை விஜிலென்ஸ் கமிஷன் ஏற்கவில்லை. ஆணையத்தின் விதிகளில் சில பகுதிகளை மட்டுமே கடைபிடித்துள்ள தொலைத் தொடர்புத்துறை மற்ற விதிகளை காற்றில் பறக்க விட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது. இன்று தனது ரெய்டை ஆரம்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கேரள லாபி நெருக்கி வருவதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக (அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு) திமுக மோதலை ஆரம்பித்துள்ள நிலையில் ராசாவின் அலுவலகததில் ரெய்ட் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் திமுக-காங்கிரஸ் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்படும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X