ஈழ தமிழர் விடுதலைக்கு உதவுவோம்-மாவோயிஸ்டுகள்
ஹைதராபாத்: தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் முடிந்து போய் விடவில்லை. இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது. அவர்களுக்கு ஆதரவும், ஆயுதமும் அளித்து உதவுவோம் என்று மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவரான முப்பால லட்சுமண் ராவ் என்கிற கணபதி இதுகுறித்து ஒரு நக்சல் ஆதரவு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
கேள்வி - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு என்ன காரணம்?
கணபதி - தமிழ் ஈழ போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மைதான். இது நிச்சயம் அந்தப் போராட்டத்திற்கு ஒரு தோல்விதான், மேலும், விடுதலைப் புலிகள் இயக்கமும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
தற்போது தமிழ் ஈழ மக்களும், அதன் தேச விடுதலைப் படையினரும் தலைவர்கள் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அங்குள்ள தமிழ் மக்களிடையே தேச விடுதலை தாகம் இன்னும் நீர்த்துப் போய் விடவில்லை. தனி தமிழ் ஈழம் அடைய வேண்டும் என்ற வேட்கை இன்னும் அவர்களுக்குள் இருக்கிறது.
தமிழ் ஈழத்தை வலியுறுத்தி அங்கு போராட்டக் களம் உருவானபோது இருந்த சூழ்நிலைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன.
சிங்கள பாசிச இலங்கை அரசு தமிழர் தாயகத்தின் கலாச்சாரத்தை, மொழியை, நிலத்தை சூறையாடப் போகிறது. பிரபாகரனின் மரணச் செய்தியைத் தொடர்ந்து கொழும்பில் சிங்கள வெறியர்கள் நடத்திய கொண்டாட்டங்களும், இலங்கை அரசே ஏற்பாடு செய்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும், தமிழ் மக்கள் மீதும், தமிழ் தேசம் மீதும் எந்த அளவுக்கு சிங்களர்கள் காழ்ப்புணர்ச்சியுடன், வெறியுடன் உள்ளனர் என்பதை காட்டியது. இதை உலகமே பார்த்தது.
அங்குள்ள ஒவ்வொரு சிங்களும் தமிழர்கள் மீது துவேஷத்துடன் உள்ளதையே இது காட்டுகிறது.
தமிழர் பகுதிகளை இன்று சிங்களர்கள் ஆக்கிரமித்திருப்பதைப் பார்க்கும்போது, யூத இன வெறியர்கள், பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருப்பதையே நினைவுபடுத்துகிறது.
இடமே இல்லாத சிங்களர்கள் இனி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்வார்கள். தமிழர் தாயகத்தின் பூகோளமே மாறப் போகிறது.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான களம் இன்னும் மங்கிப் போய் விடவில்லை. மரத்துப் போய் விடவில்லை. கால தாமதமானாலும் நிச்சயம் தமிழ் ஈழம் மலரும். அங்குள்ள அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து தங்களது உத்திகளில் சில மாற்றங்களை மேற்கொண்டு தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.
அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். எனவே நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.
சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற் கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.
தமிழ் ஈழ மக்கள் தங்களது விடுதலையை அடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். அவர்களுக்குத் தேவையான ஆதரவை நாங்கள் தருவோம். தலைமைத்துவ வழிகாட்டுதலையும் நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம்.
இதன் மூலம் சுதந்திர மக்கள் ஜனநாயக தமிழ் ஈழ குடியரசை நிறுவ முடியும்.
கேள்வி - விடுதலைப் புலிகள் அமைப்பிடம் நீங்கள் (மாவோயிஸ்ட்) பயிற்சி பெற்றது உண்மையா?
கணபதி - நிச்சயம் இல்லை. இது தவறு. இதுகுறித்து பலமுறை நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம்.
கேள்வி - ஆனால் உங்களது கமாண்டர்கள் பலர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சியும், ஆதரவும், ஆயுதமும் அளித்து உதவியாக தெரிவித்துள்ளனரே...?
கணபதி - உண்மையில் எங்களது கட்சிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது. நாங்கள் பலமுறை விடுதலைப் புலிகளுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள முயன்றோம். ஆனால் அவர்கள் முன்வரவில்லை.
எனவே, எங்களுக்கு புலிகள் பயிற்சி அளித்தார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அதேசமயம், தமிழ் ஈழ போராட்டத்திற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தோம்.
இருப்பினும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த சிலர் எங்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் மூலம் நாங்கள் ஆரம்ப காலத்தில் சில பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டோம். ஆனால் அது கூட சமீபத்தில் இல்லை, 80களின் காலாண்டு மத்தியில் நடந்தது இது என்றார் கணபதி.