இன்னும் தீராத காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - மக்கள் அவதிக்கு அளவே இல்லை
சென்னை: தீபாவளி காலம் என்பதால் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு என்று முன்னர் கூறப்பட்டு வந்தது. இப்போது தீபாவளி முடிந்தும் கூட காஸ் சிலிண்டர்கள் சப்ளையில் பெரும் தாமதம் நிலவுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே காஸ் சிலிண்டர்களுக்குப் பதிவு செய்தால் வருவதற்கு குறைந்தது 15 நாட்களாகிறது. இதுகுறித்து காஸ் டீலர்களிடம் கேட்டால், எங்களுக்கு சப்ளையே குறைவாகத்தான் உள்ளது. மேலும், இது தீபாவளிக் காலம் என்பதால், முன்கூட்டியே பலரும் சிலிண்டர்களை வாங்கி வருவதால் பற்றாக்குறை மற்றும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
காஸ் ஏஜென்சிகளுக்கு வழக்கமாக வழங்கப்பட்ட லோடுகளை விட குறைவாக எண்ணை நிறுவனங்கள் அனுப்பியதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது தீபாவளி முடிந்து விட்ட நிலையில் காஸ் சிலிண்டர் தாமதம் மற்றும் தட்டுப்பாடு தொடர்வதால் மக்கள் பேரவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த மாதம் முதல் வாரத்தில் பதிவு செய்தவர்களுக்கும் இன்னும் சிலிண்டர் வினியோகிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளைக் கேட்டால் இன்னும் லோடு வரவில்லை. வந்தவுடன் சிலிண்டர் வரும் என்கிறார்கள்.
போனஸ் பிரச்சினை தொடர்பாக எல்.பி.ஜி. தொழிலாளர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக சிலிண்டர் சப்ளை தமிழ்நாடு முழுவதும் பாதித்தது. தொழிலாளர்களின் பிரச்சினையை எண்ணை நிறுவனங்கள் ஒரு சில நாட்கள் சரி செய்தபோதும் வேலை நிறுத்தத்தால் ஒரு வாரம் சமையல் காஸ் நிரப்பும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதுவே தட்டுப்பாட்டிற்கு மூலக் காரணம் என்கிறார்கள்.
தற்போது காஸ் விநியோகப் பணி சீரடைந்து விட்டது. இருந்தாலும் முழு அளவில் லோடுகள் போகவில்லையாம.ஏற்கனவே வழங்க வேண்டிய லோடுகளை இன்னும் வழங்காததால் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி சிலிண்டர் கேட்டுப் பதிவு செய்தால் குறைந்தது 10 முதல் 15 நாட்களாகிறது வீடுகளுக்கு சிலிண்டர் வர.












Click it and Unblock the Notifications