கலக்கும் தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள்!
திருப்பூர்: தேசிய அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திருப்பூர் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற பெரியார் கண்ட கனவை சமத்துவபுரம் திட்டம் மூலம் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது இத்திட்டம். அடுத்த 5 ஆண்டுகளில் 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.
2001ல் ஆட்சி மாறி ஜெயலலிதா முதல்வரானவுடன் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதுடன், கட்டப்பட்ட 145 சமத்துவபுரங்களும் கேட்பாரற்றுப் போயின. இதனால் அங்கு குடியிருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தததும் பராமரிப்பின்றி கிடந்த 145 சமத்துவபுரங்களையும் பராமரிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கினோம். மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கவும் உத்தரவிட்டோம்.
தேசிய அளவில் தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்களே சிறப்பிடம் பிடித்துள்ளதால் வங்கிக் கடன் தாராளமாக வழங்கப்படுகிறது. அகில இந்திய அளவிலுள்ள 10,081 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 2008-09ல் ரூ.11,132 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,174 கோடி தமிழக குழுக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்த கடனில் 20 சதவீதம் தமிழக குழுக்கள் பெற்றுள்ளன. அதற்கு உரிய காலத்தில் தமிழக குழுக்கள் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியதே முக்கிய காரணம் என்றார் ஸ்டாலின்.