அகதிகள் பெயரில் சத்தியமூர்த்தி பவன், தங்கபாலுவுக்கு குண்டு மிரட்டல்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் வீட்டை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இலங்கை அகதிகள் பெயரில் மிரட்டல் வந்துள்ளது.
சென்னையில் 12 இடங்களை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகவும் நேற்று முன் தினம் அடையார் காவல் நிலையத்திற்கு கடிதம் வந்தது.
இந் நிலையில் நேற்று நேற்று மதியம் 1.50 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் தொலைபேசியில் ஒரு நபர் பேசியுள்ளார். அந்த நபர், நான் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமிலிருந்து பேசுகிறேன். உங்கள் தலைவர் தங்கபாலு எங்களுக்கு எதிராகவே பேசுகிறார், செயல்படுகிறார். ஆகவே சத்தியமூர்த்தி பவனை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம், எச்சரிக்கை என்று கூறியுள்ளார்.
தங்கபாலு வீட்டுக்கு மிரட்டல் போன்:
இதேபோல தங்கபாலு வீட்டுக்கும் ஒரு போன் வந்தது. அதிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்.தாமோதரன், டி.எல்.சிவலிங்கம், என்.மக்பூல்ஜான் மற்றும் வக்கீல் ராஜசேகரன் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதேபோல மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் ஒரு மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.
கமிஷனர் எச்சரிக்கை:
இந் நிலையில் சென்னையில் 12 இடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டிய நபர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் 12 இடங்களை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகவும் அடையார் காவல் நிலையத்திற்கு கடிதம் வந்ததையடுத்து அந்த இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும், நகர் முழுவதும் கண்காணிப்பு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நேற்று முன்தினம் சென்னை அடையாறு போலீஸ் நிலையத்துக்கு வந்த மிரட்டல் மொட்டை கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த கடிதத்தில் உள்ள சில ஆங்கில வாசகங்கள் போலீஸ் துறையில் பயன்படுத்தும் வாசகங்கள் போன்று உள்ளன. எனவே அதை எழுதியவர் யார் என்று விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். அந்த கடிதத்தை எழுதிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் சென்னை நகரை நன்கு தெரிந்து வைத்துள்ளார். குண்டு வைக்க போவதாக மிரட்டிய இடங்கள் புறநகர் பகுதியில் இருப்பதால் புறநகர் போலீஸ் கமிஷனருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கும் இந்த தகவலை அனுப்பியுள்ளோம்.
எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்கள் பெயர் மிரட்டல் கடிதத்தில் உள்ளதால் ரெயில்வே போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மிரட்டல் பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகள் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இரவு-பகலாக தீவிர ரோந்து பணி இருக்கும். அந்த பகுதிகளில் வாகன சோதனையும் நடத்தப்படும்.
கடந்த ஆண்டும் இதுபோல் இ-மெயில் மூலம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் கடிதத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம். பொதுவாக இதுபோல் மிரட்டல் கடிதம் அனுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
மிரட்டல் பட்டியலில் எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்கள், விமான நிலையம், அமெரிக்க தூதரகம், ரிச்சி தெரு, தியாகராயநகர், மெரினா கடற்கரை, போலீஸ் அகாடமி, ராணுவ பயிற்சி மையம், பைலட் தியேட்டர் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய மருத்துவ கல்லூரிகள், முக்கிய என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு பொது மருத்துவமனை போன்றவை இடம் பெற்றுள்ளன.
ராக்கெட் லாஞ்சரால் தாக்குவோம்...
இந்த பகுதிகளில் குண்டு வைத்து தாக்குவோம் என்று கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. ராக்கெட் லாஞ்சரால் தாக்குவோம் என்ற வாசகமும் உள்ளது. கோட்டூர்புரத்தில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக கடித வாசகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது குண்டு வெடிக்கும் என்ற தகவல் இல்லை. அனுப்பியவரின் பெயர், முகவரியும் இல்லை. அடையாறில் உள்ள தபால் நிலையத்தில் தான் இந்த கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதை அனுப்பியவரை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications