நலத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்தது திமுக அரசு - பொன்முடி
கடையநல்லூர்: மக்கள் நலத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்துள்ளது திமுக அரசு என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கடையநல்லூரில் அண்ணா நூற்றாண்டு விழா, திமுக அரசின் சாதனை விளக்க விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.
விழாவில் உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில்,
அண்ணாவின் கொள்கைகளையும், திராவிட கழக இயக்க லட்சியங்களையும் செயல்படுத்தி அண்ணா நூற்றாண்டு விழாவை முதல்வர் கருணாநிதி சிறப்பாக கொண்டாடினார். ஆனால் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து கொண்டு அண்ணாவின் படத்திற்கு மலர் தூவுவதோடு தனது கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்.
நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவில் 110 மாணவிகள பட்டம் பெற்றனர். ஆனால் மாணவர்களில் 10 பேர் தான் பட்டம் பெற்றனர். வருங்காலத்தில் பெண்களிடம் இருந்து ஆண்கள் சம உரி்மை கோர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 50 ஆயிரம் ஆசிரியர்களையும், 2500 கல்லூரி பேராசிரியர்களையும் சுமார் 10 ஆயிரம் டாக்டர்களையும் நியமனம் செய்துள்ளனர். சிறந்த திட்டங்களை செயல்படுத்தி முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மக்களை கவரும் அரசாக விளங்கி வருகிறது என்றார் அவர்.