செல்போன் திருடி, சாக்கடையில் விழுந்து, பூச்சி கடித்து, பிடிபட்ட திருடன் எஸ்கேப்!
சென்னை: வடிவேலு சினிமாவில் செய்யும் காமெடிக் காட்சி ஒன்றை நேரில் பார்த்த அனுபவம் வட சென்னைவாசிகளுக்கு கிடைத்துள்ளது. பிடிபட்ட ஒரு செல்போன் திருடன் தப்பிய விதமே அந்தக் காட்சி.
காட்சி - 1
28 வயது இளைஞர் உதயக்குமார். இவர் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 30 வயதான ராஜாக்கனி என்ற பெண்ணை அணுகி உங்களது பழைய செல்போனைக் கொடுத்தால், அதற்குப் பதில் புதிய செல்போன் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய ராஜாக்கனி தனது செல்போனை உதயக்குமாரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட உதயக்குமார், தன்னிடம் இருந்த பல்வேறு செல்போன்களின் படங்கள் அடங்கிய பிரவுச்சர் ஒன்றைக் கொடுத்து பார்த்து செலக்ட் செய்து சொல்லுங்க மேடம் என்று கூறியுள்ளார்.
ராஜாக்கனியும் ஆவலோடு வாங்கி பிரவுச்சரை புரட்டிப் பார்த்தார். அந்த சமயத்தில் திடீரென உதயக்குமார் ஓடத் தொடங்கினார். இதை எதிர்பாராத ராஜாக்கனி கத்திக் குரல் எழுப்பவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து உதயக்குமாரை துரத்தினர்.
காட்சி - 2
வேகமாக ஓடி வந்த உதயக்குமார், அங்கிருந்த ஒரு சாக்கடைக்குள் குதித்தார். அது, கருணாநிதி நகர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் தேங்கி நிற்கும் குட்டை ஆகும்.
அதில் குதிப்பதற்கு முன் ராஜாக்கனியின் செல்போனை கீழே போட்டு விட்டு உள்ளே குதித்து மறைந்து கொண்டார்.
உதயக்குமாரை துரத்தி வந்த கூட்டம், அவரைக் காணாமல் திகைத்து நின்றது. தகவல் அறிந்து விரைந்த வந்த போலீஸாரும் உதயக்குமாரை தேடிய மக்களுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் ஆள் அகப்படவில்லை. இதையடுத்து போலீஸார் போய் விட்டனர்.
காட்சி -3
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த தேடல் நடந்தது. அப்போது குட்டைக்குள்ளிருந்து குய்யோ முறையோ என்று கத்தியபடி வெளியே வந்தார் உதயக்குமார். சாக்கடைக் குட்டையிலிருந்து யாரோ வருவதைப் பார்த்த மக்கள் பீதியுடன் அவரை நெருங்கியபோது, உதயக்குமார், நான்தான் செல்போன் திருடியவன். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மக்கள் அவரை வெளியே கொண்டு வந்தனர். உடம்பெல்லாம் பூச்சிகள் கடித்து வீங்கிக் காணப்பட்டார் உதயக்குமார். கோபத்துடன் துரத்தி வந்த மக்களுக்கு உதயக்குமாரின் நிலையைப் பார்த்து பரிதாபம் மேலிட்டது.
காட்சி - 4
அவரை பொதுமக்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர் - திருடன் பிடிபட்டு விட்டான் என்று. அப்படியா உடனே நாங்கள் வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் பதில் வந்தது.
மருத்துவமனையின் பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட உதயக்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை அங்கு கொண்டு வந்து சேர்த்த மக்கள் வெளியே இருந்தனர்.
அப்போது, ஆர்.கே.நகர் போலீஸார் விரைந்து வந்து எங்கே திருடன் என்று மக்களிடம் கேட்டனர். உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று கூறவே உள்ளே சென்றனர் போலீஸார்.
ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உதயக்குமார் பின்னால் உள்ள வழியாக எஸ்கேப் ஆகி விட்டிருந்தார். இதைப் பார்த்து போலீஸார் மட்டுமல்லாமல் திருடனைப் பிடித்து வந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், அவனை அங்கேயே பிடித்துக் கைது செய்திருக்க வேண்டும். மிகவும் மோசமான நிலையில் அவன் இருப்பதாக மக்கள் கூறியதால் ஸ்டான்லியில் அனுமதியுங்கள், நாங்கள் வந்து விடுகிறோம் என்று கூறினோம். அது தப்பாகி விட்டது. இப்போது திருடன் எங்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி விட்டான் என்றார்.












Click it and Unblock the Notifications