ஆஸி- தமிழ் அகதிகளின் பட்டினி போராட்டம் வாபஸ்
ஜகார்த்தா: ஆஸ்திரேலியா அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அகதிகள் தங்களது பட்டினிப் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று இந்தோனேசியாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
ஓசியானிக் வைகிங் என்ற கப்பல் மூலம், 78 இலங்கைத் தமிழர்கள் புகலிடம் கோரி ஆஸ்திரேலியா நோக்கி வந்தனர். அவர்களை கிறிஸ்துமஸ் தீவு அருகே மடக்கிய ஆஸ்திரேலிய சுங்கத் துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
இதையடுத்து கப்பலில் உள்ள அனைவரும் பட்டினிப் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து இந்தோனேசிய அதிகாரிகளுடன் ஆஸ்திரேலிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கப்பலை இந்தோனேசியாவுக்குள் அனுமதிக்க இந்தோனேசியா ஒத்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் வடக்கு இந்தோனேசியாவுக்கு இக்கப்பல் செல்லவுள்ளது.
இந்தோனேசிய அதிகாரிகள் 78 தமிழர்களையும் நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் கூறியுள்ளார்.
ஆனால், இந்தோனேசிய அதிகாரிகள் இதற்கு உத்தரவாதம் தரவில்லை. அங்குள்ள அகதிகள் முகாமில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும், கப்பலை விட்டு தமிழர்கள் இறங்க மறுத்தால் படை பலத்தை பிரயோகப்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று இந்தோனேசியா கூறியிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையி்ல் ஒரே ஒரு நபருடன் ஒரு படகு ஆஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரும் இலங்கைத் தமிழராக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழர்கள் மீது இனவெறியைக் காட்டும் ஆஸி.:
ஏற்கனவே இதேபோல ஆஸ்திரேலியாவை நாடி வந்த 2
ஏற்கனவே 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுடன் வந்த கப்பலையும் இதே போலத்தான் ஆஸ்திரேலியா இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பியது.
இதனால் தமிழர்கள் மீது ஆஸ்திரேலிய அரசு இனவெறியைக் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தோனேசியாவில் தற்போது சிக்கித் தவிக்கும் தமிழர்களும், தங்களை இந்தோனேசிய அதிகாரிகள் கட்டாய்படுத்தி மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்து விடுவார்களோ என்ற பீதியில் உள்ளனர். மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் தாங்கள் கொல்லப்படுவோம் என்ற பயத்திலும் அவர்கள் உள்ளனர்.